"நீ என்னை நினைப்பே...."
"மாட்டேன்.."
"நிச்சயம் நினைப்பே..."
"மாட்டேன்.... மாட்டேன்... மாட்டேன்.. உங்க ஐஸ்க்ரீம் பேச்சுக்கு மயங்கற ஆளு நான் இல்ல..."
"என்னோடது ஐஸ்க்ரீம் பேச்சுன்னு நான் சொல்லவே இல்லையே. அப்போ நான் பேசுனா உனக்கு ஐஸ்க்ரீம் மாதிரி ஜில்லுன்னு இருக்குது."
"இல்ல.... இல்ல... இல்ல. ஆம்பளைங்க இப்படித்தான் ஐஸ்க்ரீம் மாதிரி பேசிப் பேசி பொண்ணுங்களை மயக்குவாங்க. அதுனால சொன்னேன்."
"ஆம்பளைங்க இப்படித்தான்-ன்னு உனக்கு யாரு சொன்னாங்க? நீ நிறைய ஆம்பளைங்ககிட்ட பழகி இருக்கியா?"
"இந்த மாதிரி எல்லாம் அசிங்கமா பேசுனா உலக்கையால அடிப்பேன். என் பிரெண்ட்ஸ் எல்லாம் நிறைய கதை படிப்பாங்க. அதுல வர்ற ஹீரோ எல்லாம் இப்படித்தான் பேசிப்பேசியே பொண்ணுங்களை மயக்குவாங்களாம். அதை வெச்சித்தான் சொன்னேன்."
"அப்போ படிக்கற வேலைய பார்க்கறது இல்லை. எந்த ஹீரோ என்ன பண்ணான்னு டிஸ்கஸ் பண்றதுதான் உனக்கும், உன் பிரெண்ட்ஸ்க்கும் முக்கிய வேலை." பேசிக்கொண்டே அவன் அவளருகே நெருங்கி வந்தான்.
"இதைப்பாருங்க. நின்ன இடத்துல நின்னே பேசுங்க. பக்கத்துல வர்ற வேலையெல்லாம் வேண்டாம்."
"வந்தா என்ன பண்ணுவியாம்?"
அவன் திமிராய் அவள் முகத்தின் அருகே குனிய... "ஐயோ அம்மா " என்று வீரிட்டு அலறினாள் ஆதி.
யுவாவைப் பற்றிய நினைவுகளில் இருந்த ஹர்ஷினி இந்த அலறலில் திடுக்கிட்டுப் போனாள். சட்டென்று ஆதியைப் பற்றி உலுக்கினாள்.
"ஆதி... ஆதி.... இங்க பாரு.... என்ன ஆச்சு? ஏன் கத்தறே?"
அவள் உலுக்கிய உலுக்கலில் கண்ணைத் திறந்த ஆதி பேந்தப் பேந்த விழித்தாள்.
ச்சே.... எல்லாம் கனவா?
ட்யூப்லைட்டை எரியவிட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுத்தாள் ஹர்ஷினி. மடமடவென்று மொத்த நீரும் உள்ளே போன பிறகுதான் ஆசுவாசமானது.
"எதுனாச்சும் கெட்ட கனவா?"
"களவாணிப் பய....."
"என்னது...?"
"அது.... அது.... கனவுல திருடன் வந்த மாதிரி...." வார்த்தையால் தந்தி அடித்தாள் ஆதி. விக்ரமனைக் கனவில் கண்டது உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.
ஹன்சிகா சுகா என்ற புனைபெயரில் எழுதும் இவர் பி.காம். பட்டதாரி.
பேச்சுப்போட்டிகள், கட்டுரைகள், பட்டிமன்ற கலைநிகழ்வுகள் என்று பள்ளி, கல்லூரி காலங்களில் எதையும் விட்டுவைத்தது இல்லை என்று கூறுகிறார்.
எழுத்துணர்வுக்கும், கலை உணர்வுக்கும் வித்திட்டவர்கள் தாய், தந்தை, ஆசிரியப் பெருமக்கள் மட்டுமே.
திருமணத்திற்கு பிறகு தேனியில் வாழும் இவர் தன் கணவர் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.
இவரின தற்போதைய விருப்பம் கதை எழுதுவது மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இது வரை 40கதைகளுக்கும் மேல் எழுதி உள்ளார்.