இப்புதினத்தை வாசிப்பவர்கள் இக்குறட்பாவினை மனதில் கொண்டு வாழ்வாங்கு வாழவேண்டுமென்ற நூலாசிரியரின் உள்ளக்கிடங்கைப் பாராட்டி அவரது சிந்தையும் எழுத்தும் நாளும் தொடர்ந்து நாட்டிற்கு நற்பயனை நல்கவேண்டும்.
எடப்பாடி ஆ. அழகேசன் ஏழு வயதில் எழுதத் தொடங்கினார். இன்று 63 வயதைக் கடந்து நிற்கிறார். எடப்பாடி தமிழ்ச்சங்கம் நிறுவனர், எடப்பாடி முத்தமிழ் சுற்றுச்சூழல் குழந்தைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிறுவனர் என பல அமைப்புகளில் பங்கேற்று இலக்கியப் பணிகள், இயற்கை நலம் பேணும் பணிகள் என பலவற்றில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுள்ளார்.
ஒரு சாதாரண எழுத்தாளராக அரசுப் பணியைத் தொடங்கி மத்திய மாநில அரசுப் பணிகளில் பணியாற்றி, படிப்படியாக முன்னேறி மக்கள் நல வாழ்வில் நல்ல பல முன்னேற்றங்களை, மாற்றங்களை எவ்வாறு ஏற்படுத்தித்தர முடியும் என்பதை நூலாசிரியர் மிக அழகாகத் திறம்பட இந்நூலில் எடுத்துரைக்கிறார். பல்வேறு தின, வார, மாத இதழ்கள் வானொலிகள் தொலைக்காட்சிகள் ஆகியவைகளால் பாராட்டப்பட்டவர். பல மிக மிக முக்கிய நபர்களாலும் அறிஞர் பெருமக்களாலும் பாராட்டப்பட்டவர்.
எங்களது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "மானுடம் வளர்ப்போம் சாதியம் ஒழிப்போம்" எனும் சிறுகதை நூல் சிறந்த நூலாக சென்னை பகுத்தறிவாளர் இணையத்தால் 2006-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கி பாராட்டப்பட்டுள்ளார். "கல்லூரிப் பறவைகள்" எனும் இவரது நாவலைச் சிறந்த நூலாக தேர்வு செய்து சேலம் கே.ஆர்.ஜி. நாகப்பன் அறக்கட்டளை நிறுவனமும், எழுத்துக் களம் இலக்கிய அமைப்பு, தாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளை அமைப்பு 2008, 2009 ஆண்டுகளில் அருவினை நம்பி, இலக்கிய விருது 2009-ல் வழங்கியுள்ளன. எங்களது நிறுவனத்தால் வெளியிடப்பட்ட "திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் 133 சிறுகதைகள்" எனும் நூல் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்நூலிற்கு தஞ்சை உலகத் திருக்குறள் மாநாட்டில் 26-02-2021 அன்று "திருக்குறள் சுடர்" விருதும், சேலம் தமிழ்ச் சங்கத்தால் சிறந்த நூல் பரிசு ரூபாய் பத்தாயிரமும் "தமிழ் வாகைச் செம்மல்" விருதும் 13-03-2021 அன்று வழங்கப்பட்டுள்ளன.
தமிழ் நாடு அரசு ஆளுநரின் பாராட்டுச் சான்றும், வெள்ளிப் பதக்கமும், 1-02-2021 அன்று இந்நூலாசிரியருக்கு "சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது” ரூபாய் ஒரு இலட்சம் பரிசும் ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கி பாராட்டப்பட்டுள்ளார். இலக்கிய மற்றும் பொதுநல அமைப்புகள் எழுத்துச் செல்வர், சிறந்த மாமனிதர், கவியருவி, கவிப்பேரரசர் வைரமுத்து விருது, திருக்குறள் நூலறிச் செம்மல் விருது என நாற்பதுக்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கியுள்ளனர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நோக்கர், தமிழ்நாடு தேர்வாணையக் குழுவால் தமிழ் மொழித் தேர்வுக்கு "தமிழ் வல்லுநர்" என தமிழ் மொழிக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.